கண் பார்வையிழந்த தொழிலாளிக்கு 10 வருடங்களின் பின் நஷ்டஈடு: மலேசியாவில் சம்பவம்
மலேசியாவில் முதலாளியின் அசிட் வீச்சிற்கு உள்ளாகி கண்பார்வை இழந்த இந்திய தொழிலாளிக்கு ஏழு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்கும்படி பத்து வருடங்களின் பின்னர் மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மலேசியாவில் போக்குவரத்து நிறுவனம் ஒன்றை நடத்திவரும் மெந்திர் கவுரிடம் வேலை பார்த்த குர்மிந்தர் சிங் 1997 ஆம் ஆண்டு தனது சம்பளத்தை கேட்டபோது அவரது முகத்தில் மெந்திர் கவுர் அசிட்டை வீசியுள்ளார். இதனால் குர்மிந்தர் சிங்கின் ஒரு கண்ணின் பார்வை பறிபோனது. இதனைத் தொடர்ந்து நஷ்டஈடு கோரி மலேசிய நீதிமன்றில் குர்மிந்தர் சிங் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அமர் நீதிமன்றம் இவருக்கு ஏழு இலட்ச ரூபா நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றில் மெந்திர் கவுர் தாக்கல் செய்த மனுவையும் மேல் நீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. ஆனால், தனக்கு நஷ்டஈடு கொடுக்கும் நிலையில், மெந்திர் கவுர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி திரும்பவும் வழக்குத் தொடுத்தார். இதனை மீள் விசாரணை செய்த நீதிபதிகள் மெந்திர் கவுரின் வீட்டை ஏலம்விட்டு அதில் கிடைக்கும் தொகையிலிருந்து நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டனர். இந்த நஷ்டஈட்டினைப் பெறுவதற்காக குர்மிந்தர் சிங் 10 ஆண்டுகளாக மலேசியாவில் தங்க நேரிட்டதுடன், ஒரு கண்ணின் பார்வை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்.
இதேநேரம், அவரது வேலை அனுமதியினையும் மெந்திர் கவுர் இரத்துச் செய்ததால் தடுப்புக்காவல் மையத்தாலேயே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், குர்மிந்தர் சிங் மீது இரக்கங்கொண்ட மலேசிய குடியேற்ற அதிகாரிகள் இவரை தடுப்புக் காவல் மையத்திற்கு வெளியில் சுதந்திரமாக தங்குவதற்கு அனுமதியளித்தனர்.