தூத்துக்குடியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: கண்டெய்னர் லாரி டிரைவர்கள் 2 பேர் கைது!!
தூத்துக்குடி பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளி நாட்டிற்கு கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின்கோட்னீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரது தலைமையில் தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்து, ரென்னிஸ் மற்றும் போலீசார் தூத்துக்குடி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோரம்பள்ளம் அருகே மாதவன் நகரில் உள்ள ஜோசுவா ரத்தினம் என்பவருக்கு சொந்தமான குடோனில் சோதனை நடத்திய போது, அங்கு நின்ற கண்டெய்னர் லாரியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 20 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.8 கோடி இருக்கும். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த குடோன் ஜோசுவா ரத்தினம் என்பவருக்கு சொந்தமானதும், அந்த குடோனை மரியஅண்டோ என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்துள்ளதும் தெரியவந்தது.
மேலும் அந்த செம்மரக் கட்டைகள் ஆந்திரா மாநிலம் ஓங்கோல் பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டதும், பின்னர் தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய் மற்றும் மலேசியாவுக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி இன்று கண்டெய்னர் லாரி டிரைவர்கள் தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன், கேம்ப் 1 பகுதியை சேர்ந்த வெற்றிவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
தலைமறைவான சுப்பையா, அசாருதீன், சுரேஷ், மரியஆண்டோ, அ.தி.மு.க. பிரமுகர் ஜோசுவா ரத்தினம், மற்றொரு சுப்பையா மற்றும் ஒருவர் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான பாலகிருஷ்ணன், வெற்றிவேலிடம் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் பலரின் விவரமும் தெரியவரும். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் தூத்துக்குடி வனத்துறை சரக அலுவலர் நெல்லைநாயகம் தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Average Rating