கிரஹலட்சுமியுடன் திருமணம் நடந்தது உண்மை-வேணு
தனக்கும் கிரஹலட்சுக்கும் திருமணம் நடந்தது உண்மை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் வேணுபிரசாத். பிரசாந்த்-கிரஹலட்சுமி இடையிலான விவகாரத்து வழக்கு பல்வேறு திருப்பங்களுடன் நடந்து வருகிறது. கிரஹலட்சுமிக்கும் நாராயண வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், அதை மறைத்துவிட்டு கிரஹலட்சுமி தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் பிரசாந்த் குற்றம் சாட்டினார், அதற்கான ஆதாரங்களையும் சமர்பித்தார். இந் நிலையில் தனக்கும் வேணுபிரசாத்துக்கும் இடையே திருமணம் நடக்கவில்லை என்றும், இருவரும் காதலித்தது மட்டுமே உண்மை என்றும் கிரஹலட்சுமி கூறி வருகிறார். இதற்கிடையே தனக்கும் கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணத்தை ரத்து செய்யும்படி குடும்ப நல நீதிமன்றத்தில் வேணுபிரசாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நடந்து வருகிறது. இங்கு கிரஹலட்சுமி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், எனக்கும் வேணுபிரசாத்துக்கும் திருமணமே நடக்கவில்லை. திருமணம் நடந்ததாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே வேணுபிரசாத் எனக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது வேணுபிரசாத் ஒரு பதில் மனு தாக்கல் செய்தார். அதில், எனக்கும், கிரஹலட்சுமிக்கும் திருமணம் நடந்தது உண்மை. 1998ம் ஆண்டு திருமணம் அந்த பதிவுத் திருமணம் நடந்தது என்று கூறியுள்ளார். இதையடுத்து விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.