மோட்டார்சைக்கிள் சாவியை பயன்படுத்தி ஏ.டி.எம். மையத்தில் நூதன கொள்ளை முயற்சி: மாணவர் 2 பேர் கைது!!
திருச்சியில் மோட்டார் சைக்கிள் சாவியை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கே.கே.நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று 2 வாலிபர்கள் அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து தனியார் மருத்துவமனையின் விசிட்டிங் கார்டு மற்றும் ஷாப்பிங் மால்களில் வழங்கப்படும் வாடிக்கையாளர் கார்டு மூலம் எந்திரத்தில் பணம் எடுக்க முயற்சித்தனர்.
ஆனால் பணம் வராததால், மோட்டார் சைக்கிள் சாவியை ஏ.டி.எம். எந்திரத்தினுள் நுழைத்து திறக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக ரோந்துப்பணி சென்ற போலீஸ்காரர் அபுபக்கர் சித்திக், சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏ.டி.எம். மையத்துக்குள் நின்ற 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தார்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால், 2 பேரையும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள், திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெரு விஸ்தரிப்பை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22) என்பதும் தெரிய வந்தது. இதில் கிறிஸ்டோபர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–வது ஆண்டு படித்து வருகிறார். ராஜேஷ் 10–வது வரை மட்டும் படித்து உள்ளார். அவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
இருவரும் இரவு முழுவதும் அளவுக்கு அதிகமாக குடித் துள்ளனர். பின்னர் தூக்க மாத்திரையை பீருடன் கலந்து குடித்துள்ளனர். அதே போதையில் முதலில் பாலக்கரையில் இருந்து கே.கே.நகர் வரை உள்ள பல ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். கே.கே.நகர் ஏ.டி.எம். மையத்தில் மாட்டிக் கொண்டனர்.
மேலும் இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் இதே போல் வேறு எந்த ஏ.டி.எம். எந்திரத்திலாவது பணம் கொள்ளையடித்துள்ளார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating