அசோக்நகரில் போலீஸ் அதிகாரி மனைவியை கத்தி முனையில் மிரட்டிய ரவுடி!!
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் ரவுடி ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சிவராம்குமார். இவர் அசோக்நகர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் சிவராம் குமாரின் மனைவி சிவகாமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்த வாலிபர் ஒருவர் சிவராம் குமாரின் வீட்டுக்கு சென்று சிவகாமியிடம் கத்தியை காட்டி மிரட்டியபடி ‘உங்கள் கணவரை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள். தேவையில்லாத விசயங்களில் அவர் தலையிடுகிறார். இது அவருக்கு நல்லதல்ல. இது போல் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.
அதை கேட்டதும் சிவகாமி துணிச்சலுடன் அந்த வாலிபரிடம் எதிர்த்து பேசி நீ யாருடா? என்று கேட்டுள்ளார்.
உடனே அந்த வாலிபர் அங்கிருந்து நைசாக நழுவி விட்டார்.
இதுபற்றி அசோக் நகர் போலீசில் சிவகாமி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்ஸ்பெக்டர் சிவராம் குமார் தூத்துக்குடி கோல்டன் நகரை சேர்ந்தவர். பணியில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் நெல்லையில் பணியாற்றினார்.
பல ஆண்டுகளாக சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவே பணியாற்றி வந்துள்ளார். தி.நகர் பகுதியில் பணியாற்றியபோது பல வழக்குகளை துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் தள்ளினார்.
தற்போது ரவுடி ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் கண்டுபிடித்து சிறையில் தள்ளி வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட ரவுடி ஒருவன்தான் இந்த மிரட்டலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மிரட்டல் விடுத்த ஆசாமி யார்? என்பது தெரியவில்லை.
போலீஸ் குடியிருப்பில் கண்காணிப்பு காமிரா இல்லாததால் மிரட்டல் விடுத்தவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரை கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற கைதி ஜெயக்குமார் மிரட்டல் விடுத்தான். இதுபற்றி அவர் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் அந்த கைதி ஜெயக்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இந்த நிலையில் பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஒருவரை ரவுடி ஒருவன் போலீஸ் குடியிருப்பில் புகுந்து மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating