போலீஸ் கமிஷனராக பணியாற்றிய 10 வயது சிறுவன்: சிறுநீரக பாதிப்புக்குள்ளானவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்!!
சிறுநீரகம் பாதிப்புக்குள்ளான 10 வயது சிறுவன் கிரிஷ் சர்மாவின் போலீஸ் கமிஷனர் ஆசையை, ஜெய்ப்பூர் நகர போலீசார் நிறைவேற்றியுள்ளனர்.
அரியானா மாநிலம், சிர்சாவை சேர்ந்த கிரிஷ், சிறுநீரக பாதிப்பால் ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே. லோன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்கு ‘மேக் எ விஷ்’ என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகிகள் கிரிஷை சந்தித்தனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரியாக ஆவதே தனது லட்சியமாக இருந்தது என்று கிரிஷ் கூறினான். இதைக் கேட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கிரிஷின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்தனர்.
உடனடியாக ஜெய்ப்பூர் நகர ஆணையாளராக உள்ள ஜங்கா ராவை சந்தித்த அறக்கட்டளை நிர்வாகிகள், கிரிஷின் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரும் கிரிஷின் ஆசையை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி காலை மருத்துவமனையில் இருந்து சைரன் வைத்த வெள்ளை நிற அம்பாசிடர் காரில் அழைத்து வரப்பட்ட கிரிஷ், ஜெய்ப்பூர் நகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டான்.
பின்னர் ஜெய்ப்பூர் நகர போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கிரிஷ் ஏற்றுக்கொண்டான். அதன்பின் அருகிலுள்ள காந்தி நகர் காவல்நிலையத்துக்கு சென்ற கிரிஷ், பணியில் இருந்த காவலர்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரித்தான். இவ்வாறு நாள் முழுவதும் கமிஷனராக வலம் வந்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்ட கிரிஷ், இறுதியாக பத்திரிகையாளர்களின் கூட்டத்தை கூட்டி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கும் சளைக்காமல் பதிலளித்தான்.
தனது மகனின் ஆசை நிறைவேறியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிரிஷின் தந்தை ஜக்தீஷ் சர்மா, எத்தனை நாள் எனது மகன் உயிருடன் இருப்பான் என எனக்கு தெரியவில்லை. எனினும் தற்போது அவன் பூரண குணமடைந்து விடுவான் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது, என்றார். கிரிஷ் பூரண குணமடையவேண்டும் என்று நாமும் பிரார்த்தனை செய்வோம்.
Average Rating