பிலிப்பைன்ஸ் நாட்டில்: வணிக வளாகத்தில் குண்டு வெடித்து 8 பேர் பலி; 70 பேர் காயம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் உள்ள வணிக வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியானார்கள். 70 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் மகதி என்ற வர்த்தக பகுதியில் குளோரியட்டா ஷாப்பிங் சென்டர் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு மதிய உணவு இடைவேளை நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் 4 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்தவர்களில் 4 பேர் ஆஸ்பத்திரிகளில் பலியானார்கள். மொத்தம் 70 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடித்ததில் கட்டிடம் சேதம் அடைந்தது. கட்டிடத்தின் மேல் தளத்தின் காங்கிரீட் பகுதிகள் பெயர்ந்து விழுந்தன. இதில் கீழே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் சேதம் அடைந்தன. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. முதலில் கியாஸ் சிலிண்டர்தான் வெடித்தது என்று போலீசார் கருதினார்கள். பிறகு, அது தவறான முடிவு என்ற எண்ணத்துக்கு அதிகாரிகள் வந்தனர். கடந்த காலத்தில் மகதி பகுதியில் முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வளாகத்தின் காவல்காரர் கூறுகையில், “நான் மதிய உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, குண்டு வெடித்தது. அப்போது பூமியே குலுங்கியது. பூமி அதிர்ச்சி போல என்று நான் நினைத்தேன். அதன்பிறகு மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்குப்பகுதியில் உள்ள மின்டானாவோ பகுதியில் தான் முஸ்லிம் தீவிரவாதிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.