தேர்தல் வேலை செய்த பெண் பற்றி அவதூறான தகவல்: குமார் விஸ்வாசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்!!
அமேதி தொகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
மகளிர் ஆணைத்தில் அப்பெண் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்ட குமார் விஸ்வாசுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்தேன். இந்நிலையில் நானும், விஸ்வாசும் நெருக்கமாக இருந்தபோது, எங்களை கையும் களவுமாக பிடித்ததாக விஸ்வாசின் மனைவி சில மாதங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து விஸ்வாசிடம் இது குறித்து நான் பேசினேன். அப்போது விஸ்வாசின் மனைவி கூறியது போல், எங்களுக்குள் எவ்வித தொடர்பும் இல்லை என்று உறுதிப்படுத்துமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
அவரும் செய்தியாளர்களை சந்தித்து உண்மையை விளக்குவேன் என உறுதியளித்தார். எனினும் இவ்விஷயத்தை பெரிது படுத்தவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் பல நாட்கள் ஆகியும் விஸ்வாஸ் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பல முறை கடிதம் அனுப்பியும் அவரிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. எனவே விஸ்வாஸ் மீது தற்போது புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அப்பெண் மகளிர் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
அப்பெண்ணின் புகாரை ஏற்ற ஆணையம், விஸ்வாஸ் மற்றும் அவரது மனைவியை ஆணையத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குமார் விஸ்வாஸ் மீதான புகாரை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating