சொத்துக்காக அடகு கடை அதிபர்–மனைவியை கூலிப்படையை ஏவி கொன்ற உறவினர்கள் 5 பேர் கைது!!
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் போலீஸ் சரகம், ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை செட்டியார். இவரது மனைவி யசோதா. அண்ணாமலை அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தார்.
இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 21–ந்தேதி அடையாளம் தெரியத சில மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டு 27 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக அவரது உறவினர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் திருப் ‘பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி ஆகியோரின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், சாதுரமேஷ், பாலமுருகன், மலைச்சாமி, சார்பு ஆய்வாளர்கள் தாமோதரன், சபரிதாசன், துரைசிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையில் எஸ்.எஸ்.கோட்டை அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் மதுரை, மாப்பாளையம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பிராண்டன் டி. செல்வா (வயது 34), மதுரை, மீனாட்சி புரம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த தினேஷ் பாபு(29), மதுரை செல்லூர், மணவாளன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்ற காசி (28) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரித்ததில் அண்ணாமலை செட்டியார் அவரது மனைவி யசோதா கொலை வழக்கில் இவர்கள் 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட அண்ணாமலை செட்டியாருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் அண்ணாமலையின் உறவினரான ஏரியூர் காளீஸ்வர பட்டினத்தை சேர்ந்த சிவனேசன் செட்டியார் (75) என்பவர் கூலிப்படை அமைத்து தம்பதியர் இருவரையும் கொலை செய்தது தெரிய வந்தது.
இதில் மதுரை மாப்பாளையத்தைச் சேர்ந்த அல்ஹஜ்(34) என்பவருக்கும் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவனேசன் செட்டியார் (75), அல்ஹஜ் (34), பிராண்டன் டி.செல்வா (34) தினேஷ்பாபு (29) மணிகண்டன் (எ) காசி(28) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 33 பவுன் நகைகளை மீட்கப்பட்டன.
Average Rating