அறந்தாங்கி அருகே கோவில் விழாவில் விவசாயி கொலை!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவனத்தான்கோட்டையில் உச்சி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1–தேதி தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக மண்டகப்படிதாரர்களின் பூஜைகள் நடந்து வருகிறது. இதில் 8–ம் நாளான நேற்று ஆவனத்தான் கோட்டை கிழக்கு பகுதியை சேர்ந்த கரு.ராமசாமி மகன் முருகேசன் (வயது 48) விவசாயி குடும்பத்தாரின் மண்டகப்படி நடந்தது.
இதையொட்டி சாமி ஊர்வலமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சாமி ஊர்வலம் புறப்பட தயாரானது. அப்போது முருகேசன் சாமி ஊர்வலத்தில் முக்கிய பங்காற்றினார்.
அந்த சமயம் அங்கு அவரது பங்காளிகள் தங்களிடம் சொல்லாமல் சாமி ஊர்வலம் நடத்தக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முருகேசன் மற்றும் அவரது பங்காளிகள் தரப்பில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
கோவிலுக்குள்ளேயே இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் முருகேசன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவத்தால் கோவில் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி முருகேசன் உடலை கைப்பற்றினார்கள். பின்னர் வழக்கு பதிவு செய்து முருகேசனை கொலை செய்த பங்காளிகளை தேடி வருகிறார்கள்.
Average Rating