வாகன மோசடி செய்த இருவர் கைது
கார் விற்பனை நிலையமொன்றிலிருந்து புதிய வாகனங்களை வாடகைக்கு எடுத்து விட்டு பின்னர் அவற்றைப் போலி ஆவணங்களைக் காட்டி விற்பனை செய்துள்ளமை தொடர்பாக இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு 9 வாகனங்களுக்கு மேல் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வத்தளையைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டின் பேரிலேயே சந்தேக நபர்களான கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த எம்.ஹ{சைன், கலேவெலையைச் சேர்ந்த மொஹமட் அன்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெப்பத்திகொல்லாவ, ஹல்ஸ்டோப் நீதிமன்றங்களில் உள்ள பல வழக்குகள் தொடர்பில் பொலிஸாரினால் இச்சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலஸ்முல்லை, இரத்தினபுரி பொலிஸ் நிலையங்களிலும் இவர்கள் மீதான முறைப்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட ஏனைய 12 சந்தேக நபர்கள் தலைமறைவாக இருப்பதாக தாம் நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோட்டைப் பொலிஸாரினால் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நாளைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.