மனைவியை தற்கொலைக்கு தூண்டிய டெல்லி ஓரினச்சேர்க்கை டாக்டரின் நீதிமன்றக் காவல் 16-ம் தேதி வரை நீட்டிப்பு!!
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை டாக்டரின் நீதிமன்றக் காவல் மே 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பிரியா வேதி (வயது 31), கடந்த மாதம் டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் ஓட்டலில் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். பிரியா வேதி தனது பேஸ்புக்கில் தற்கொலை கடிதம் ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.
அதில், தனது கணவர் டாக்டர் கமால் வேதி ஒரினச்சேர்க்கை பழக்கம் உடையவர் என்றும் அவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு மனரீதியாக கொடுமைப் படுத்தியதாகவும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா வேதியின் கணவர் கமால் வேதியை கடந்த மாதம் கைது செய்தனர். கமால் வேதியும் எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ஆவார்.
கைது செய்யப்பட்ட கமால் வேதியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் இன்று டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கமால் வேதியின் நீதிமன்றக் காவலை மே 16-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சச்சின் சங்வான் உத்தரவிட்டார்.
Average Rating