துணி திருடியதாக வீட்டில் சோதனை: ஜவுளிக்கடை ஊழியர் அவமானத்தில் தற்கொலை!!
தண்டையார்பேட்டை, சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சின்ன மலைசாமி (வயது 46). பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சோலையம்மா. இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜவுளிக்கடையில் துணிகள் இருப்பை உரிமையாளர் முகம்மது அன்சாரி பாபா சரிபார்த்தார். அப்போது ஏராளமான துணிகள் மாயமாகி இருந்தது.
இதனால் சின்னமலை சாமி மீது சந்தேகம் அடைந்த அவர் திட்டியதாக தெரிகிறது. மேலும் சின்னமலை சாமியின் வீட்டிற்கு சென்று சோதனை போட்டு உள்ளார். அவரை மிரட்டி மோட்டார் சைக்கிளையும் பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சின்னமலைசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று மதியம் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
ஆனாலும் திருட்டு பட்டத்தால் அவமானம் அடைந்த சின்னமலைசாமி மனைவியிடம் புலம்பி வந்தார். அவரை மனைவி சமாதானப்படுத்தினார்.
இந்த நிலையில் நேற்று இரவு சோலையம்மா அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சின்னமலைசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோலையம்மா வீட்டுக்கு திரும்பி வந்த போது கணவர் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தண்டையார் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திர போஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வீட்டில் சோதனை செய்த போது சின்னமலைசாமி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–
நான் செய்யாத தவறுக்கு என் மீது வீண் பழி சுமத்தியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் முன்பு என்னை மிரட்டி அவமானப்படுத்தி விட்டனர். என் சாவுக்கு கடை உரிமையாளரே காரணம். என் மரணத்தில் மனைவிக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது. சின்னமலைசாமி தற்கொலை செய்திருப்பது தெரிந்ததும் கடை உரிமையாளர் முகமது அன்சாரி பாபா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating