பயங்கரவாதம் ஒழியும் வரை போர் : இலங்கை அதிபர் ராஜபக்சே சபதம்
“பயங்கரவாதம் முழுமையாக ஒழியும் வரை அரசின் போர் தொடரும்; அதே நேரத்தில், இலங்கை இனப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு முயற்சித்து வருகிறது,” என்று இலங்கை அதிபர் மகிந்திரா ராஜபக்சே கூறியுள்ளார். இது தொடர்பாக ராஜபக்சே அளித்த பேட்டி: இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியிலான தீர்வு காண நாங்கள் முயற்சித்து வருகிறோம். அதே நேரம், பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதம் முழுமையாக ஒழியும் வரை இலங்கை அரசின் போர் தொடரும். மனித உரிமை பிரச்னை தொடர்பாக சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுகள் கூறிவருகின்றன. எங்களை பொறுத்தவரை, நாங்கள் எதையும் மறைக்கவில்லை. மனித உரிமை பாதுகாப்பை உறுதி செய்ய எங்கள் அரசு திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறது. இது போன்ற திட்டத்தை இதுவரை எந்த நாடும் செயல்படுத்தியது இல்லை. நாங்கள் ஏற்படுத்தியுள்ள மனித உரிமை அமைச்சகம், இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இலங்கை அரசு பொருளாதர வளர்ச்சியில் கணிசமான அளவுக்கு முன்னேற முயற்சித்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், பால் பவுடர் போன்ற பொருட்களின் விலை உயர்ந்து வருவது இலங்கையில், எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் அனைத்து துறையிலும் முன்னேற்றம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் அரசின் புதிய திட்டம், கிராம மேம்பாட்டுக்கு பெரிதும் வழி வகுக்கும். தேசிய பாதுகாப்புக்கும், எரிபொருள் விலை உயர்வு காரணமாக அதிகளவில் செலவிட வேண்டியிருந்தாலும், எங்கள் அரசு கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.