மாமியார் வீட்டு வாசலில் மருமகள் நிர்வாண “தர்ணா!’
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, தன்னை எரித்துக்கொல்ல முயன்ற, மாமியாரை எதிர்த்து, வீட்டு வாசலில், நிர்வாண போராட்டம் நடத்தினார் மருமகள். சில மாதங்கள் முன், குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண், ராஜ்கோட் வீதியில், பிரா, ஜட்டி மட்டும் அணிந்து, “என் கணவன், அவரின் குடும்பத்தினரிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்’ என்று , வலம் வந்தார். இந்த காட்சிகளை, “டிவி’ சேனல்கள் காட்டின. நாடு முழுக்க பெரும் சர்ச்சை கிளம்பி, அந்த பெண்ணுக்கு தீர்வு கிடைத்தது. ஆனால், உ.பி.,மாநித்தில் எங்கோ உள்ள சேலம்பூர் என்ற கிராமத்தில், அதை விட வேதனையான சம்பவம், சமீபத்தில் நடந்துள்ளது. கணவன் வீட்டில் குடியேறிய ஷிவானிக்கு , கணவனாலும், அவரின் மாற்றாந்தாயாலும் பெரும் கொடுமைகள் நடந்தன. சமீபத்தில் ஒரு நாள், ஷிவானியை அழைத்து, “வரதட்சணை வாங்கி வா; இல்லாவிட்டால், தற்கொலை செய்து கொண்டு விடு’ என்று , மாமியார் மிரட்டினார். தன் கையில் இருந்த கெரசின் பாட்டிலை, ஷிவானியிடம் தந்து, “நீயாக தீ வைத்துக்கொண்டு சாகிறாயா, நாங்கள் தீ வைக்கட்டுமா?’ என்று மிரட்டினார். ஷிவானிக்க உடல் பதைத்தது. எப்படியாவது தப்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு இருந்தது. அதனால், மவுனமாக நின்றிருந்தாள்.
மாமியாரோ, கெரசினை, ஷிவானி மேல் ஊற்றினாள். தீப்பெட்டியை எடுத்து, தீயை பற்ற வைக்க தயாரான போது, எங்கிருந்தோ வந்த தைரியத்தால், ஷிவானி, தன் உடைகளை எல்லாம் நொடிப்பொழுதில் அகற்றி விட்டு, வாசலுக்கு ஓடினாள். அங்கு நிர்வாணமாக உட்கார்ந்து கத்தத்துவங்கினாள்.
பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் குவிந்துவிட்டனர். ஷிவானியின் நிர்வாண கோலத்தை பார்த்து அதிர்ந்துவிட்டனர். ஆனால், ஷிவானியோ, “நான் இங்கிருந்து உள்ளே போக மாட்டேன்; என்னை கொன்று விடுவர். நான் போலீசுக்கு தான் போவேன். என் பெற்றோரை வரவழையுங்கள்’ என்று மன்றாடிக் கேட்டாள். கூட்டத்தில் இருந்த பெண்கள்,சிலர் புடவையை தந்தனர். ஆனால், அவள் அதை மறுத்து விட்டாள்.
இதனிடையே போலீசார் வந்து, ஷிவானிக்கு புடவையை தந்து கட்டிக்கொள்ளச் செய்தனர். அவளிடம் புகாரை எழுதி வாங்கிக்கொண்டனர். அவளின் கணவனை போலீசார் அழைத்து,” ஷிவானி உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், நீ தான் பொறுப்பு. உன்னையும், சித்தியையும் சிறையில் தள்ளி விடுவோம்’ என்று எச்சரித்து விட்டுச் சென்றனர்.