லஞ்சத்தில் சீனாவை மிஞ்சியது இந்தியா!
சீனாவை , இந்தியா எந்த துறையில் மிஞ்ச முடிகிறதோ இல்லையோ, ஒரு துறையில் மிஞ்சி விட்டது. அது… லஞ்சஊழல்! சர்வதேச அளவில் சர்வே மேற்கொள்ளும், “ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்’ என்ற நிறுவனம், இந்தியா , சீனா உட்பட சில நாடுகளில் , லஞ்சம் தொடர்பாக சர்வே நடத்தியது. அப்போது, இந்த பகீர் தகவல் தெரியவந்துள்ளது. சர்வே அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவை விட,இந்தியாவில் தான் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய குவிந்து வருகின்றனர். ஆனால், அவர்களும் லஞ்ச ஊழல் ஆசாமிகளிடம் சிக்கி தவிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் 5,400 பேரிடம் சர்வே செய்ததில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இவர்களில் 38 சதவீதம் பேர், “தாங்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துத்தான் உரிமம் பெற்றோம்’ என்று கூறியுள்ளனர். மற்ற நாடுகளில் சர்வே எடுத்ததில், சீனாவில் 21, மெக்சிகோவில் 28 சதவீதம் பேர் லஞ்சம் தந்ததாக கூறியுள்ளனர். லஞ்ச ஊழலில், இந்தியாவை மிஞ்சியுள்ள நாடுகள், ரஷ்யா, இந்தோனேசியா, பிரேசில் ஆகியவை. சொத்து மோசடி, பொருளாதார குற்றங்கள், கணக்குகளில் தில்லுமுல்லு உட்பட எல்லா வகை குற்றங்களும் இந்த நாடுகளில் நடக்கின்றன.