ஆதிவாசி மக்களின் நலனுக்காகவே போராட்டம் நடத்தினார்கள்: கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் பேட்டி!!
கோவை கருமத்தாம்பட்டியில் கைதான மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஸ்–ஷைனா தம்பதியரின் சொந்த ஊர் திருச்சூர் பகுதி ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆமி, சவேரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இருவரும் திருச்சூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருகிறார்கள். ரூபேஸ் கைதான தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த ஆமி தந்தையை சந்திக்கவும், அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உறவினர்களுடன் சேர்ந்து ஏற்பாடுகள் செய்தார்.
இதற்காக கல்லூரியை விட்டு வெளியே வந்த அவரை நிருபர்கள் சந்தித்து கருத்து கேட்டனர்.
அப்போது அவர் கூறியதாவது:–
எனது தந்தை ரூபேஸ், கேரள மாநில மலை பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்காக போராடி வந்தார். அரசியல்வாதிகள் அவர்களை பற்றி பேசினார்களே தவிர எதையும் செய்யவில்லை. ஆனால் எனது பெற்றோர் அவர்களின் நலன் காக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்காக போராடிய அவர்களை பற்றி பெருமைபடுகிறேன். எனது பெற்றோரை போலீசார் தீவிரவாதிகளாக சித்தரித்து பொய் வழக்கு போட்டுள்ளனர். அவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் கைதாவார்கள் என்று நினைக்கவில்லை. அவர்களை வெளியே கொண்டு வர சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன்.
போலீசார் கூறி இருப்பது போல எனது பெற்றோர் சமீபத்தில் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. தாக்குதலும் நடத்தவில்லை. போலீசார் கூறுவது அனைத்தும் ஜோடிக்கப்பட்ட சம்பவங்கள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூபேஸின் சகோதரர் ராஜேஷ் கூறியதாவது:–
எனது சகோதரர் குற்றமற்றவர். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம். அவரை விடுவிப்பது குறித்து பேச இன்றே கோவை செல்ல இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating