ஈரானில் 12 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஈரான் நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட்ட 12 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண் உட்பட ஒன்பது பேருக்கு கொலைக்குற்றத்திற்காக தெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதுடன் மற்றைய மூவருக்கும் கற்பழிப்பு குற்றத்திற்காக தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமியச் சட்டத்தின்படி கொலை, கொள்ளை, ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. மரண தண்டனை வழங்கப்பட்டவர்களில் எட்டுப்பேருக்கு பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. மேலும், அப்பெண்ணுக்கு தனது முதலாளியை கடந்த 2001 இல் கொலை செய்தமைக்காக இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் ஏனைய மூவருக்கும் கொலை, கற்பழிப்பு மற்றும் ஆட்கடத்தல் போன்ற காரணங்களுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. ஈரானில் அதிகரித்து வரும் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்புத் தெரிவிக்கும் அதேவேளை, கடந்த 2006 இல் 177 ஆக இருந்த மரண தண்டனைக் கைதிகளின் தொகை இவ்வாண்டில் இதுவரை 210 ஆக உயர்ந்துள்ளது.