திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய சப்–இன்ஸ்பெக்டர் மகன் கைது!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் சுகந்தி (வயது24). இவர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
கடந்த 2013–ம் ஆண்டு நான் சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது எனக்கும், சிவகங்கை வேலாயுத கோவில் தெருவை சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டரின் மகன் ராஜசுந்தரத்துக்கும் காதல் ஏற்பட்டது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தோம். அப்போது ராஜசுந்தரம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக பழகினார். இதனால் நான் கர்ப்பமானேன்.
இதையடுத்து உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜசுந்தரத்திடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்ய முன்வராமல் ஏமாற்றி வந்தார். எனக்கு குழந்தை பிறந்த பிறகும் அவர் என்னை திருமணம் செய்யவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலி விசாரணை நடத்தி பெண்ணை காதலித்து ஏமாற்றிய ராஜசுந்தரத்தை கைது செய்தார்.
Average Rating