மாவோயிஸ்டு கும்பலுடன் கண்ணன் கைது: காதல் மனைவி ரீனா ஜாஸ்மின் மதுரையில் பதுங்கலா?
கோவை கருமத்தம் பட்டியில் மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ் (வயது40), அவரது மனைவி ஷைனி (35), அனுப் (33), மதுரையை சேர்ந்த கண்ணன் (46), கடலூர் ஈஸ்வரன் என்ற வீரமணி (37) ஆகிய 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 5 பேரும் தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு சதி வேளைகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாவோயிஸ்டு கும்பலில் கைது செய்யப்பட்டுள்ள மதுரை குயவர்பாளையத்தை சேர்ந்த கண்ணன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.
பட்டப்படிப்பு வரை படித்த கண்ணனுக்கு மாவோயிஸ்டு கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டதால் அந்த இயக்கத்தில் சேர்ந்து விட்டார். அப்போது அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வந்த ரீனா ஜாஸ்மின் என்பவருக்கும் கண்ணனுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ரீனா ஜாஸ்மின் மாவோயிஸ்டு இயக்கத்தை வழி நடத்த மூளையாக கண்ணன் செயல்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது ரீனா ஜாஸ்மின் தப்பிவிட்டார். அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை பழைய குயவர்பாளையத்தில் உள்ள கண்ணன் வீட்டிலும் விசாரணை நடத்தினர். தலைமறைவான ரீனா ஜாஸ்மின்னுக்கு மதுரையில் நிறைய நண்பர்கள் இருப்பதும், அவர் மதுரையில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோரிப்பாளையம், குயவர்பாளையம் பகுதியில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
கைதான கண்ணனின் தாயார் லீலாவதி மற்றும் சகோதரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரீனா ஜாஸ்மின் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர்கள் போலீசாரிடம் கண்ணன் கடந்த 20 ஆண்டுக்கு முன்பே வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவரது முகம் கூட எங்களுக்கு மறந்துவிட்டது. அவர்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரையில் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating