மஸ்தான்வலி எனது கணவர்: செம்மரகட்டை கடத்தலில் நான் ஈடுபடவில்லை – நடிகை நீத்து அகர்வால் பேட்டி!!
செம்மரகட்டை கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை நீத்து அகர்வாலை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நடிகை நீத்து அகர்வால் ஆந்திராவில் தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான் வலி எனது கணவர் ஆவார். அவர் என்னை திருமணம் செய்து கொண்டார்.
ராஜஸ்தானை சேர்ந்த நான் ஐதராபாத் வந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தேன். 8 படங்களில் நடித்துவிட்டேன்.
மஸ்தான்வலி தயாரித்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். படப்பிடிப்பு நேரங்களில் அவர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். அவரது நடவடிக்கை எனக்கு பிடித்திருந்தது. படம் 90 சதவீதம் நிறைவடைந்த வேளையில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தினோம்.
சினிமா தவிர மஸ்தான் வலி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவதாக கூறினார். அவர் செம்மர கடத்தலில் ஈடுபடுவது எனக்கு தெரியாது. அவர் எனது கணவர் என்பதால் பணம் போட்டு எடுப்பதற்காக எனது வங்கி ஏ.டி.எம் கணக்குகளை பயன்படுத்தினார். மற்றபடி எனக்கும் செம்மர கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செம்மர கட்டை என்ன நிறத்தில் இருக்கும் என்றே எனக்கு தெரியாது.
ஐதராபாத்தில் உள்ள வீட்டை எனக்கு மஸ்தான் வலி வாங்கி வரவில்லை. நான் படங்களில் நடித்து தான் அந்த வீட்டை வாங்கினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating