பிளஸ்–2 தேர்வில் மதிப்பெண் குறைவு: குமரியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி!!
பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். என்றாலும் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவ–மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துள்ளது.
இதனை தடுக்க அரசு 104 உதவி மையம் மூலம் உளவியல் ஆலோசனைகள் அளிக்கும் என அறிவித்த பின்பும் சில மாணவிகள் இத்தகைய முடிவை எடுப்பது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும் நேற்று பிளஸ்–2 தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது போல வெள்ளிச்சந்தையை அடுத்த செதூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும் பிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்றும் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார்.
விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating