பிளஸ்–2 தேர்வில் தோல்வி எதிரொலி: குடியாத்தம் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேர் தற்கொலை!!
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தநிலையில் பிளஸ்–2 தேர்வு எழுதிய வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உப்பரபல்லி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயபால் மகன் ரகு (வயது 18) என்பவர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவர் ரகு, உப்பரபல்லி கானாற்றில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தொங்கி தற்கொலை செய்துகொண்டார். ரகுவின் சட்டைப்பையில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். தனியார் ஷூ நிறுவனம் ஒன்றில் காவலாளியாக உள்ளார். அவரது மகன் குணசேகரன் (17), பிளஸ்–2 தேர்வில் தோல்வி அடைந்தார்.
இதனால் மன வேதனை அடைந்த குணசேகரன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதைக்கண்ட உறவினர்கள் குணசேகரனை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், குணசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவனின் தந்தை நாகராஜ் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சிவநேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் 2 பேரும் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating