கேரளாவில் வீராங்கனை தற்கொலை: 8 சீனியர் வீராங்கனைகளிடம் போலீசார் விசாரணை!!
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் (சாய்) பயிற்சி பெற்ற அபர்ணா உள்பட 4 வீராங்கனைகள் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் அபர்ணா உயிரிழந்தார். மேலும் 3 வீராங்கனைகள் ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பயிற்சியாளர்கள் மற்றும் இங்குள்ள மூத்த வீரர்கள் துன்புறுத்தியதாலேயே வீராங்கனைகள் தற்கொலைக்கு முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக எர்ணாகுளம் ஐ.ஜி. அஜீத்குமார், ஏ.எஸ்.பி. வனிதா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று சாய் இயக்குனர் ஜெனரல் இன்ஜிதிஸ்ரீனிவாஸ் ஆலப்புழாவில் சிகிச்சை பெறும் வீராங்கனைகளை பார்த்தார். அவர்களின் பெற்றோரையும் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் ‘பலியான வீராங்கனை அபர்ணா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். அவரது தாயாருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.
கேரள உள்துறை மந்திரி ரமேஷ்சென்னிதலா பலியான அபர்ணாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரிடம் அபர்ணாவின் தாயார் புகார் மனு கொடுத்தார். அதில் எங்கள் மகள் தற்கொலைக்கு 8 சீனியர் வீராங்கனைகள் தான் காரணம். அவர்கள் மன ரீதியாக துன்புறுத்தி வந்ததாக அபர்ணா எங்களிடம் கூறினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் புகார் மனுவில் கூறிய 8 சீனியர் வீராங்கனைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது தவறு இருந்தது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Average Rating