பள்ளி விடுதியில் மாணவி மர்ம சாவு: உறவினர்கள் முற்றுகை!!
உத்திரமேரூர் தாலுக்கா அரசாணிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி இறந்து விட்டார். இவரது 2–வது மகள் மீனா (17). இவர் 1½ வயது முதலே, அரசாணிமங்கலம் அருகே உள்ள வாடாநல்லூரில் உள்ள டி.எம்.காண்வெண்ட்டில் தங்கி படித்து வந்தார்.
தன்னுடைய மகளை அடிக்கடி சென்று ராஜேந்திரன் பார்த்து விட்டு வருவார். 8–ம் வகுப்பு தேர்வில் மீனா தோல்வி அடைந்தார்.
பள்ளி நிர்வாகம் ராஜேந்திரனிடம் ‘மீனாவை எங்கள் காண்வெண்டுக்கு சொந்தமான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைக்கிறோம்’ என கூறி மீனாவை அங்கு அழைத்து சென்றனர்.
கடந்த 6–ம் தேதி மீனா தனது அக்காவிற்கு செல்போனில் பேசியுள்ளார். அப்போது ‘இங்கே என்னை வீட்டு வேலைகள் செய்யுமாறு கூறுகின்றார்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அப்பாவுடன் வந்து என்னை அழைத்து செல்லுங்கள்’ என கூறினார்.
பின்னர் 7–ந்தேதி மார்தாண்டம் விடுதியில் இருந்து ராஜேந்திரனுக்கு போன் வந்தது. அதில் ‘உங்கள் மகள் மீனா விஷம் குடித்து இறந்து விட்டதாக’ தெரிவித்தனர்.
மகள் சாவில் சந்தேகம் இருந்ததால் இது குறித்து ராஜேந்திரன் மார்தாண்டம் போலீசில் புகார் செய்தார். தன்மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவருடைய மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மீனாவின் உடல் மார்தாண்டத்தில் பிரேத பரிசோதனை முடிந்து அரசாணிமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இன்று காலை இருளர் நலச்சங்கத்தினரும், தமிழ்நாடு விவசாயிகள் நல சங்கத்தினரும் வாடாநல்லூரில் உள்ள டி.எம்.காண்வெண்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating