கைதான கணவரை விடுவிக்கக்கோரி கையை பிளேடால் அறுத்த இளம்பெண்: போலீஸ் நிலையத்தில் பரபரப்பு!!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரியை சேர்ந்தவர் பால்மாணிக்கம் (வயது 21). கல்லூரி மாணவரான இவர் கடந்த 2013ம் ஆண்டு ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். ஆனால் கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று வள்ளியூர் போலீசார் அப்பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறியுள்ளனர்.
போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தவே, அவர்கள் கேசவநேரியை சேர்ந்த செங்கல்சூளை உரிமையாளர் லிங்கதுரை (வயது35), டெம்போ டிரைவர் ரவிகுமார் என்பதும், பாலமாணிக்கம் கொலையில் அவர்களுக்கு தொடர்பிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் லிங்கதுரையின் மனைவி சித்ரா(29) நேற்று மாலை வள்ளியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு சென்றவர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். கைதான தனது கணவரை விடுவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார். இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
அப்போது ஆத்திரமடைந்த சித்ரா, திடீரென கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating