வீட்டில் அடைத்து வைத்து வெளிமாநில பெண்ணை சித்ரவதை: தொழில் அதிபர் கைது!!
தேவகோட்டை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருபவர் ராஜாராம் (வயது 45). இவருக்கு திருமணமாகி சென்னையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வேலை விசயமாக ராஜாராம் அடிக்கடி ஆந்திராவுக்கு செல்வாராம். அப்போது, ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரை சேர்ந்த இப்ராகீம் மகள் நஸ்சரீகா (27) என்பவருடன் காதல் ஏற்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராஜாராம் தனது மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வதாக கூறி, நஸ்சரீகாவை தேவகோட்டைக்கு அழைத்து வந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையில் அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜாராமை வலியுறுத்தி வந்தார். இந்தநிலையில் ராஜாராம் தனது நண்பரை அழைத்துக்கொண்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் சந்தோசமாக இரு என நஸ்சரீகாவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நஸ்சரீகா மறுத்துள்ளார். இந்தநிலையில் ராஜாராம் இல்லாத போது, அவரது நண்பர் நஸ்சரீகாவுக்கு தொல்லை கொடுத்தாராம். தெலுங்கு மொழி மட்டுமே தெரிந்த அவர், நாளிதழ்களில் வந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்புச்சாமி தலைமையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேகலா, சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர், அந்த வீட்டுக்கு சென்று நஸ்சரீகாவை மீட்டனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் ராஜாராமை கைது செய்தனர். ராஜாராமின் நண்பரை தேடி வருகின்றனர்.
Average Rating