காரைக்காலில் கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது!!
காரைக்கால் சுனாம்புகார வீதியை சேர்ந்தவர் முகமதுஇர்பான் (வயது 25). காரைக்காலில் கடந்த 24–12–2013 அன்று இளம்பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. இந்த விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கற்பழிப்பு வழக்கில் முகமதுஇர்பான் கைது செய்யப்பட்டு இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் காரைக்கால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அவர் பள்ளிக்கு செல்லும் வழியில் நின்று கொண்டு கேலி–கிண்டல் செய்தார்.
இதுபற்றி அந்த மாணவி தனது தந்தையிடம் கூறினார். அவர் முகமதுஇர்பானை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த முகமதுஇர்பான் அந்த மாணவியிடம் சென்று முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதுபற்றியும் தனது தந்தையிடம் அவர் தெரிவித்தார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த முகமதுஇர்பான் மாணவி தனது தாயாருடன் ஸ்கூட்டரில் சென்றபோது மோட்டார்சைக்கிளில் சென்று அந்த ஸ்கூட்டரில் மோதினார். இதில் கீழே தாய்–மகள் இருவரும் காயம் அடைந்தனர்.
இதுபற்றி மாணவியின் தந்தை காரைக்கால் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை புதுவை வந்து போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் கொடுத்தார்.
உடனே இதன்மீது நடவடிக்கை எடுக்க காரைக்கால் போலீசாருக்கு ஐ.ஜி. உத்தரவிட்டார். அதையடுத்து முகமதுஇர்பானை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண்ணை கேலி செய்தல், கொலை மிரட்டல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating