தெரு குத்துச்சண்டைப் போட்டியில் 17 வயது வாலிபர் பலி!!
ஐதராபாத்தில் உள்ள தனது 17 வயது மகனுக்காக துபாயில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரும் அப்பாவுக்கு, கடந்த மே 3-ம் தேதி மகனின் நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்தது. உங்கள் மகன் சாலை விபத்தில் பலியாகி விட்டான் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பதறிப் போய் இந்தியா வந்த அந்த வாலிபரின் அப்பா நண்பர்களின் பேச்சால் சந்தேகமடைந்து போலீசில் புகாரளித்தார். வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவரது நண்பர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியானது.
ஒரு பொது இடத்தில் வைத்து தொலைக்காட்சியில் பார்க்கும் குத்துச்சண்டை நிகழ்ச்சிகளைப் போல, வாலிபர்கள் தங்களுக்குள் வழக்கமாக மோதிக் கொள்வது தெரிய வந்தது. சம்பவம் நடந்த மே 3 அன்று நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த வாலிபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். அப்போது 10 பேர் உடன் இருந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடமிருந்து சண்டையின் போது எடுத்த வீடியோவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Average Rating