கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: 8 வயது சிறுவன் பலி!!
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 35). அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (27). இவர்களுக்கு மணிகண்டன்(8) என்ற மகனும், பாக்கியஸ்ரீ(4) என்ற மகளும் உள்ளனர்.
இன்று காலை மந்திரமூர்த்தியின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கதவை தட்டி மந்திரமூர்த்தியை அழைத்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் கேட்கவில்லை. இதைத்தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மந்திரமூர்த்தி, கோமதி, பாக்கியஸ்ரீ ஆகிய 3 பேரும் விஷம் குடித்தநிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மணிகண்டன் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தான்.
இதையடுத்து 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு டவுன் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.
ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்த மந்திரமூர்த்தி பலரிடம் கடன் வாங்கியிருந்தார். நீண்ட நாட்களாகியும் அவரால் கடனை அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்றிரவு வீட்டை பூட்டி விட்டு 4 பேரும் விஷம் குடித்து விட்டனர். இதில் மணிகண்டன் பலியாகி விட்டான். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மணிகண்டன் அங்குள்ள பள்ளியில் 2–ம்வகுப்பு படித்து வந்தான். பாக்கியஸ்ரீ எல்.கே.ஜி.படித்து வந்தாள்.
Average Rating