கேரள பெண் மந்திரி, விவசாயி திருமணம்: உம்மன் சாண்டி நேரில் வாழ்த்து!!
கேரள பெண் மந்திரிக்கும், விவசாயிக்கும் திருமணம் நடந்தது. இதில் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினர்.
கேரள மாநிலம் மனந்தாவடி தனி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மலைவாழ் இனத்தை சேர்ந்த பி.கே.ஜெயலட்சுமி (வயது 29). இவர் ஆதிதிராவிடர் மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக உள்ளார். கேரள கூட்டணி அரசில் உள்ள ஒரே பெண் மந்திரி இவர் தான்.
ஜெயலட்சுமிக்கும், விவசாயி சி.ஏ.அனில்குமாருக்கும் (36) பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து மந்திரி ஜெயலட்சுமி கட்சி பாகுபாடு இன்றி அனைத்து பிரமுகர்களுக்கும் தானே நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைப்பு விடுத்தார்.
ஜெயலட்சுமிக்கும், அனில்குமாருக்கும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய இந்து கலாசாரத்தின்படி அவர்களின் சொந்த ஊரான வல்லாடு அருகே உள்ள மபாயில் கிராமத்தில் எளிய முறையில் நேற்று திருமணம் நடந்தது. மணமகள் ஜெயலட்சுமி பச்சை நிற பட்டு சேலை அணிந்திருந்தார். மணமகன் அனில்குமார் வெள்ளை நிற சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார்.
சுபமுகூர்த்த நேரத்தில் மணமகன் அனில்குமார், ஜெயலட்சுமியின் கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் இருவரும் மல்லிகை மாலைகளை மாற்றி கொண்டனர். அப்போது மணமக்கள் இருவரும் கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டனர்.
திருமண விழாவில் மந்திரிகள் ரமேஷ் சென்னிதாலா, கே.சி.ஜோசப், சபாநாயகர் என்.சக்தான் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. இந்த திருமணம் கேரள தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கேரளாவில் இதற்கு முன்பு இதே போல மந்திரியாக இருந்த டி.வி.தாமஸ், கம்யூனிஸ்டு பெண் தலைவர் கே.ஆர்.கவுரியை மணந்தார். தற்போது முதல்-மந்திரியாக உள்ள உம்மன் சாண்டி 1977-ம் ஆண்டு மந்திரியாக இருந்த போது தான் மரியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating