வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!
சிவகங்கை மாவட்டத்தில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலி பறிப்பது மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவது வீடுகளில் புகுந்து திருடுவது என அடுத்தடுத்து குற்றச்சம்பவங்கள் நடந்து வந்தது தொடர்பாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த குற்ற நடவடிக்கைகளை தடுக்க வாகன சோதனை நடத்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று சிவகங்கை தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், ஏட்டுகள் தங்கராஜ், ராஜ் குமார் ஆகியோர் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்களிடம் சோதனை நடத்தி ஆவணங்களை காட்டும் படி போலீசார் கேட்டனர். ஆனால் அவர்கள் ஆவணங்களை காட்ட மறுத்ததுடன் போலீசாரை மிரட்டி திடீரென மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து 2 பேரும் தாக்க முயன்றனர்.
இதைப்பார்த்ததும் அங்கு நின்று இருந்த மற்ற போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்து சிவகங்கை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பிடிபட்டவர்களிடம் விசாரித்தனர்.
இதில், நாட்டரசன் கோட்டை அருகே உள்ள திருவேலங்குடியை சேர்ந்த காளிமுத்து (வயது30), மற்றொருவர் நாட்டரசன் கோட்டையை சேர்ந்த வினோத்குமார் (28) என்பது தெரியவந்தது. காளிமுத்து சமீபத்தில் தான் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை செய்ய முயன்றதாக அவர்கள் 2 பேர் மீதும் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு வழக்குபதிவு செய்தார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட காளிமுத்து, வினோத்குமார் ஆகிய 2 பேரும் சிவகங்கை மாஜிஸ்திரேட் வெங்கடேசப்பெருமாள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
Average Rating