கோவையில் கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் ஆமிக்கு பேஸ்–புக்கில் பெருகும் ஆதரவு!!
கோவை கருமத்தம்பட்டியில் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த மாவோயிஸ்டு தம்பதியான ரூபேஷ், அவரது மனைவி சைனா என்ற ஷைனி மற்றும் 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடைபெறுகிறது.
கோவை அவினாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் விசாரணை நடைபெற்று வருகிறது. வருகிற 15–ந் தேதியுடன் போலீஸ் காவல் முடிகிறது.
இந்தநிலையில் ரூபேசும், ஷைனியும் திருப்பூரில் கடந்த 2½ ஆண்டாக தங்கியிருந்த தகவல் போலீசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூரில் ரூபேஷ் தங்கியிருந்த போது அவர்களது மகள்களான ஆமி(வயது 16), தாஜூ(13) ஆகியோர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
வழக்கம் போல் அவர்கள் பெற்றோரை சந்திக்க வந்த போது தான் போலீசார் பின்தொடர்ந்து வந்து கண்காணித்தனர். அப்போது தான் ரூபேஷ் தம்பதி திருப்பூரில் தங்கியிருப்பது உறுதியானது.
அவர்களை பின்தொடர்ந்த போதுதான் கருமத்தம்பட்டியில் சிக்கினர். இந்த நிலையில் ரூபேஷ் தம்பதியின் மூத்த மகள் ஆமியிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது போலீஸ் காவலில் உள்ள ஷைனிக்கு தெரியவரவே அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று மாலை ரூபேஷ் தம்பதியின் வக்கீல்கள் கேசவன், பாலமுருகன் ஆகியோர் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு சென்று அவர்களை சந்தித்தனர்.
அப்போது ஷைனி அவரிடம் மிகவும் கலக்கமாக ‘எனது மூத்த மகளிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளார்களா? என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அப்படியெல்லாம் விசாரணை நடத்த முடியாது. கேரளாவில் ஆமியின் பெயரில் பேஸ் புக்கில் தனி பக்கம் உருவாக்கியுள்ளனர். அந்த பக்கத்தில் ‘ஆமியை பாதுகாப்போம், உரிமையை பாதுகாப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சமூக வலைதளத்துக்கு இதுவரை 6,500 பேர் ஆதரவு(‘லைக்’) தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. எனவே ஆமியிடம் விசாரிக்க முடியாது என்றனர். அதன் பின்னரே ஷைனி சற்று மன நிம்மதி அடைந்தார்.
Average Rating