கர்நாடகாவில் 2 பெண்கள் – குழந்தை உள்பட 5 பேர் கொலை: போலீசார் விசாரணை!!
தர்மபுரி மாவட்டம் இண்டூர் மற்றும் மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அந்தியூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 39) அழைத்து சென்றார். இந்த தொழிலாளர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே உள்ள ஹரள்ளி கிராமத்தில் தங்கி உள்ளனர். சிலர் தங்களது குடும்பங்களை அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கு மேல் தொழிலாளர்கள் அனைவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் அரிவாளால் 5 பேரை சரமாரியாக வெட்டி கொன்றனர்.
இதில் சத்தியமங்கலம் ராஜேந்திரன் (38), அவரது மனைவி ராஜம்மாள் (28), ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த காசி (35), அவரது மனைவி சிவம்மாள் (32), அவர்களது குழந்தை ரோஜா (5) ஆகியோர் பலியானார்கள்.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 15–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெட்டு காயத்துடன் தப்பிச் சென்றனர். அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்களா? அல்லது சொந்த ஊருக்கு வந்தார்களா? என்றும் தெரியவில்லை. அவர்களின் பெயர் விவரமும் தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு சாம் ராஜ் எஸ்.பி. ரங்கசாமி மற்றும் கொள்ளேகால் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக 4 பேரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
Average Rating