திருப்பத்தூரில் ரூ.3 ஆயிரம் கடனுக்காக குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூரம்!!
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அர்ஷத்குமார். அவரது மனைவி லட்சுமி. பெங்களூருவை சேர்ந்தவர்கள். இருவரும் திருப்பத்தூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கேஷ்வர் (வயது 3) என்ற மகனும், புவனேஸ்வரி (2) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அர்ஷத்குமார் தனது மனைவி லட்சுமியை பிரிந்து தனியாக சென்றுவிட்டார்.
அதையடுத்து லட்சுமி, குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள சீமா மற்றும் அவரது தாயார் கர்லின் என்பவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அப்போது லட்சுமி, சீமாவிடம் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை லட்சுமியால் திருப்பி கொடுக்க முடியவில்லை. சீமா பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
அதைத்தொடர்ந்து தனக்கு தெரிந்த இடத்தில் வேலைக்கு சென்று, எனது கடனை அடைத்துவிடு என சீமா, லட்சுமியை ஒரு இடத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். இந்தநிலையில் சம்பவத்தன்று லட்சுமி தனது குழந்தைகள் கேஷ்வர், புவனேஸ்வரி ஆகிய 2 பேரையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்த குழந்தைகள் கதறி அழுதன. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது 2 குழந்தைகளின் உடலில் ஆங்காங்கே தீக்காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த குழந்தைகளை மெழுகுவர்த்தியால் சூடு வைத்து சீமாவும், அவரது தாயார் கர்லினும் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், வீட்டிற்கு வந்து தனது 2 குழந்தைகளை எதற்காக தீயால் கொடுமைபடுத்தினாய்? என சீமாவிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீமா மற்றும் கர்லின் ஆகிய 2 பேரும் லட்சுமியை தாக்கி உள்ளனர். மேலும், லட்சுமிக்கு கடனாக கொடுத்த ரூ.3 ஆயிரத்தை திருப்பி கொடுக்காததால் தான் குழந்தைகளுக்கு சூடு வைத்ததாகவும் கூறியுள்ளனர்.
தீக்காயம் அடைந்த குழந்தைகள் 2 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு தலைமறைவான சீமா, அவரது தாயார் கர்லின் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Average Rating