ராமநாதபுரம் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்: 3 பெண்களிடம் 15 பவுன் நகை பறிப்பு!!
ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து மனைவி வள்ளி (வயது60).
நேற்று இவர் வீட்டில் இருந்து வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வள்ளியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் நடந்து அரைமணி நேரத்திற்கு பின்னர் அதே சாலையில் நடந்து சென்ற குண்டூரணி வலசையை சேர்ந்த கோபால் மனைவி பூரண வள்ளியிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 7 பவுன் செயினை பறித்து சென்றனர்.
இதுகுறித்து 2 பெண்களும் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தனர். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பால்பாண்டி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
இதேபோன்று ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள புலிவீரத்தேவன் கோட்டையை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ரேணுகா தேவி, வீட்டில் இருந்து ஊரணிக்கு சென்றார்.
அங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ரேணுகாதேவி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பினார்கள்.
இதுகுறித்து ரேணுகா தேவி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேற்கண்ட 3 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரே நாளில் நடந்த இந்த 3 சம்பவங்களால் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
Average Rating