காரியாபட்டியில் ரோட்டில் நடந்து சென்ற பெண் வெட்டிக்கொலை: கணவர் போலீசில் சரண்!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்னாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது65). இவரது மனைவி அழகுமீனாள்(57). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, ராமலிங்கம் காரியாபட்டி பாண்டியன் நகருக்கு குடி வந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
மனைவி அழகுமீனாள், காரியாபட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பகுதி நேர துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக கணவன்–மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதில் அழகுமீனாள் கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள மகள் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இன்று காலை அழகு மீனாள் வேலைக்கு செல்வதற்காக காரியாபட்டி–கள்ளிக்குடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமலிங்கம், அழகு மீனாவை வழிமறித்து, மனைவி என்றும் பாராமல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அழகுமீனாளை, காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு அரிவாளுடன் ராமலிங்கம், காரியாபட்டி போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating