சிங்களப்படம் எடுப்பேன்! ராதிகாவின் பேச்சுக்கு பெண்கள் அமைப்பு சூடு!
சென்னையில் நடந்த சிங்கள திரைப்பட விழாவை துவக்கி வைத்திருக்கிறார் ராதிகா. வந்தோமா? ரிப்பன் வெட்டினோமா என்று போகாமல் அவர் கூறிய சில கருத்துக்கள் ஆவி பறக்கும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. அப்படியென்ன சொல்லிவிட்டார் ராதிகா? எனது பள்ளிப்படிப்பு பெரும்பாலும் இலங்கையில்தான் இருந்தது. இலங்கையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிங்கள தொடர்களை தயாரித்து வருகிறேன். விரைவில் சிங்கள படம் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். இதுதான் ராதிகாவின் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள். சிங்கள திரைப்பட விழாவை ராதிகா துவக்கி வைத்ததும், அங்கு அவர் பேசிய பேச்சுகளும் தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் செய்கிற துரோகம்! -இப்படி குமுற ஆரம்பித்திருக்கிறார் தமிழ்நாடு அன்னையர் முன்னணி யின் அமைப்பாளர் சரஸ்வதி. நடிகை ராதிகாவை வாழ வைத்ததும், வாழ வைத்துக் கொண்டிருப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும்தான். ஆனால் இப்போது தனது சிங்கள அடையாளத்தை காட்ட முயற்சிக்கிறார் ராதிகா. ஏனென்றால் நடிகை ராதிகா பாதி சிங்களப்பெண் என்று ஏடாகூடமாக குற்றம் சுமத்துகிறார் சரஸ்வதி.
சரி… ராதிகா என்ன சொல்கிறார்? கலை என்பது மொழி, இனம், அரசியல், சாதி எல்லாவற்றையும் கடந்து நிற்பது. இதற்கு எல்லைகள் கிடையாது. அந்த வகையில்தான் இலங்கை திரைப்பட விழாவில் கலந்து கொண்டேனே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. எனது குழந்தைப்பருவம் இலங்கையில்தான் என்றாலும் நான் முழுமையாக ஒரு தமிழ் பெண்ணாகதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிறார்.