கேரள கோவில்களில் பக்தர்களிடம் நகை திருடிய தூத்துக்குடி பெண்கள் 2 பேர் கைது!!
கேரள மாநிலம் கல்லம்பலா பகுதியில் சங்கர நாராயணசாமி கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
இதில் கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிக்கும் கும்பலை கண்டுபிடிக்க போலீசார் மாறு வேடத்திலும் சுற்றி வந்தனர். அப்போது லெட்சுமணன் குட்டி என்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க நகையை 2 பெண்கள் நைசாக திருடினர்.
அவர்களை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களை கல்லம்பலா போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அந்த பெண்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த பேச்சி (வயது 35), பரமேஸ்வரி (28) என தெரிய வந்தது. இதில் பரமேஸ்வரி 8 மாத கர்ப்பிணி ஆவார். அவரை போலீசார் விசாரணைக்கு பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இவர்களுக்கு கேரளாவில் உள்ள பல்வேறு கோவில்களில் நடந்த திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Average Rating