இந்தியிலும் மிரட்டும் ‘சந்திரமுகி
தமிழில் ஜோதிகாவின் மிரட்டல் நடிப்பில் உருவான சந்திரமுகி, இப்போது இந்தியில்,’பூல் புலயா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி இந்தி ரசிகர்களையும் வெற்றிகரமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. பிரியதர்ஷன் இயக்கத்தில் பல ஆண்டுளுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா ஆகியோரின் நடிப்பில் உருவான படம்தான் மணிச்சித்திரத் தாழ். இப்படத்தில் நடித்ததற்காக ஷோபனாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படத்தைத்தான் பி.வாசு, ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். பின்னர் இது சந்திரமுகியாக உருமாறி தமிழைக் கலக்கியது. முந்தைய இரு படங்களையும் விட மிகப் பிரமாண்டமாக பேசப்பட்டு, வசூலையும் வாரிக் குவித்தது. இந் நிலையில் பிரியதர்ஷன் தனது மணிச்சித்திரதாழ் படத்தை லேசாக மாற்றி, தற்போது இந்தியில் ரீமேக் செய்துள்ளார். பூல் புலயா என்ற பெயரில் வந்துள்ள இப்படத்தில் அக்ஷய்குமார், வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினி நடித்த மனோதத்துவ டாக்டர் சரவணன் கேரக்டரில் அக்ஷய் குமார் வருகிறார்.
பேய் பிடித்த பெண் வேடத்தில் வித்யா பாலன் அசத்தியுள்ளார். ஷோபனா, செளந்தர்யா (கன்னடத்தில்), ஜோதிகா அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட தனது ஸ்டைலில் கலக்கலாக நடித்துள்ளார் வித்யா பாலன் (இவரும் ப்ரியதர்ஷனைப் போலவே கேரளா தான்).
மலையாளம், தமிழ், கன்னடத்தைப் போலவே இந்தியிலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாம். ஒரிஜினல் கதையில் கொஞ்சம் போல மாற்றி இந்தி ரசிகர்களுக்கேற்றார் போல மாற்றியுள்ளார் பிரியதர்ஷன்.
மணிச்சித்திரத்தாழ் மற்றும் அதன் ரீமேக் படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றுள்ளதால் பிரியதர்ஷன் குஷியாகியுள்ளார். காரணம் படத்தின் கதாசிரியர் அவர்தான் என்பதால்.
பேய் எந்த பாஷையில் பேசினால் என்ன, எங்கு ஆடினால் என்ன, ரசிகர்களை நல்லா மிரட்டினால் போதும்!