சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு!!
சுனந்தா கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட சசிதரூரின் டிரைவர் உள்பட மூன்று பேர் பொய் சொல்வதாக டெல்லி சிறப்பு புலனாய்வு குழு சந்தேகம் எழுப்பியுள்ளது. இதனால் அம்மூவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் புலனாய்வு குழு அனுமதி கோரியுள்ளது. சசிதரூரின் வீட்டு உதவியாளர் நரெய்ன் சிங், டிரைவர் பஜ்ரங்கி மற்றும் தரூரின் நண்பர் சஞ்சய் தேவன் ஆகியோர் பொய் சொல்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனந்தாவின் மரணத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், பல்வேறு முரண்பாடுகள் பற்றிய கேள்விக்கு சரியான பதிலை அளிக்க மறுப்பதாகவும் இம்மூவர் மீதும் புலனாய்வு குழு குற்றஞ்சாட்டியுள்ளது. சுனந்தாவின் மரணத்திற்கான காரணம் கண்டிப்பாக இம்மூவருக்கும் தெரியும் என்று உறுதிபட கூறியுள்ள புலனாய்வு குழு, 2014 ஆம் ஆண்டு, ஜனவரி 17 தேதியன்று சுனந்தா தங்கியிருந்த அறை எண் 345-ல் இரவு 7 மணிக்கு ஏன் மின்தடை ஏற்பட்டது என்ற கேள்விக்கு 3 பேருமே அமைதியாக இருந்ததாக கூறியுள்ளது.
மின்தடைக்கு பின்னர் தான் சுனந்தா மரணம் குறித்த செய்தி வெளியே கசிந்தது. அப்போது சசிதரூருடன் இம்மூவர் தான் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இம்மூவரையும் வரும் 20-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் சர்மா சம்மன் அனுப்பியுள்ளார்.
முன்னதாக இவ்வழக்கில் இதுவரை நடந்த விசாரணை குறித்த முழு விவரங்களையும் தனது மனுவில் புலனாய்வு குழு குறிப்பிட்டுள்ளது. இவ்விவரம் தனி கட்டுரையில் வெளிவரும்…
Average Rating