25 தீவிரவாதிகள் படுகொலை: பாக்.பாதுகாப்பு படை அதிரடி
பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 25 மலைஜாதி தீவிரவாதிகள் பலியானார்கள்.
பாகிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வந்த தலிபான் தீவிரவாதிகள் மற்றும் அல் குவைதா தீவிரவாதிகள் ஏராளமனோர் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கு பாகிஸ்தான் மலைப்பகுதி மக்கள் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இவர்களும் தீவிரவாத நடவடிக்கைகளில் அவ்வபோது ஈடுபட்டு வருகின்றனர். பலுச்சிஸ்தான் மாகாணத்தல் உள்ள ஒரு மலைப்பகுதியில் மலைஜாதி தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த பகுதியை பாகிஸ்தான் படையினர் சுற்றி வளைத்தனர். பீரங்கி ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மலைஜாதி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடவடிக்கைகள் இரண்டு நாட்களாக நடைபெற்றன. தாக்குதலுக்கு பிறகு ஏராளமான ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாகிஸ்தான் படையினர் கைப்பற்றினர்.
இந்த தாக்குதலில் மேலும் பலர் காயம் அடைநதனர். மலைஜாதி தீவிரவாதிகள் நடத்திய தகவல் தொடர்புகளை இடைமறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 25 பேர் பலியாகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பகுதியை மையமாக வைத்துக்கொண்டு இந்த தீவிரவாதிகள் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் என்று கூறப்படுகிறது.