அனுராதபுரம் விமானத்தளம் மீதான எல்.ரி.ரி.ஈ யினரின் தாக்குதல் பதில் நடவடிக்;கை மூலம் முறியடிப்பு! 20 க்கும் மேற்பட்ட புலிகளும் பலி!!
இலங்கை விமானப் படையின் அனுராதபுர விமானத் தளத்தின் மீது இன்று அதிகாலை எல்.ரி.ரி.ஈ யினர் மேற்கொண்ட தாக்குதலை படையினர் முறியடித்து பதில் தாக்குதல் நடத்திய வேளை 20 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சண்டை நடந்த பகுதியில் எல்.ரி.ரி.ஈ யினரின் இருபது சடலங்கள் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், வான் மற்றும் தரை வழியாக புலிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை உரிய பதில் தாக்குதல் மூலம் தாம் முறியடித்துள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தற்போது இப்பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது@ எல்.ரி.ரி.ஈ. யினர் சிலர் விமானத் தளத்தினுள் நுளைந்து விமானப்படைச் சொத்துக்களை அழிப்பதற்கு தாக்குதல் ஒன்றைத் தொடுத்துள்ளனர். இதன்போது, இரு மென்ரக வானூர்திகளையும் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். தாக்குதல் இடம்பெற்றுள்ள வேளையில் தளத்தை இலக்குவைத்து விமானங்கள் மூலமாக இரு குண்டுகளையும் வீசியுள்ளனர். இத்தாக்குதலில் 8 விமானப்படை வீரர்கள் காயத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், எம் ஐ 24 ரக ஹெலிகொப்டர் இரண்டு சேதமடைந்துள்ளன. இதேவேளை தாக்குதல் இடம் பெற்ற போது, கடமையில் ஈடுபட்டிருந்த பெல் 212 ரக ஹெலிகொப்டர் மிகிந்தலையில் வைத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட வேளை, நால்வர் உயிரிந்துள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் இரு விமானமோட்டிகளும், ஐந்து விமானப்படையினருமாக ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.