காதல் தகராறில் மதுவில் விஷம் கலந்து வாலிபரை கொல்ல முயற்சி: 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி!!
சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து 45). செங்கல்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக உள்ளார்.
இவரது மகன் அஜித் குமார் (17). இவரும் அருகில் உள்ள எட்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் (23) என்பவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தனர். இதனால் இருவரும் மனமுடைந்து காணப்பட்டனர்.
இருவரையும் சமாதானம் செய்து வைப்பதற்காக மகேந்திரனின் நண்பர் தனசேகரன் (18) தைலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்றார். பின்னர் அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் உட்கார்ந்து 3 பேரும் மது குடித்தனர். போதை தலைக்கேறியதும் காதல் தகராறு மோதலாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனை கண்ட பொதுமக்கள் தடுத்தனர். அப்போது அஜித்குமார் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஜித்குமாரை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மதுவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து மகேந்திரனையும், தனசேகரையும் பிடித்து வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். படுகாயமடைந்த இருவரையும் ரெயில்வே கேட் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் வாசலில் பிடித்து வைத்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சப்–இன்ஸ்பெக்டர்கள் பாபு, குப்புசாமி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் விசாரித்தனர். இருவரையும் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.
பின்னர் மருத்துவமனைக்கு சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அஜித்குமாரை பார்த்து விட்டு டாக்டர்களிடம் விசாரித்தனர்.
இதுபற்றி அஜித்குமாரின் பெற்றோர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating