கோவை அருகே என்ஜினீயரிங் மாணவி தாயுடன் தற்கொலை!!
கோவை கணபதி அருகேயுள்ள நல்லாம்பாளையம் பாலாஜி நகரில் வசித்து வந்தவர் இந்திராணி(வயது 42). ரத்தினபுரியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மகள் சுவாதிகாரேவதி(20). கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு ‘இ.சி.இ.’ படித்து வந்தார். மகன் ஜோகிந்தர்ராஜ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இந்திராணி தனது கணவரை பிரிந்து விட்டார். அதன் பின்னர் மகன், மகளுடன் வசித்து வந்தார். கணவரை விட்டு நிரந்தரமாக பிரிந்து வாழ்வதற்காக விவாகரத்து கோரி கோர்ட்டில் இந்திராணி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தனது தாயார் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது சுவாதிகாரேவதிக்கு பிடிக்கவில்லை. தந்தையுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தினார்.
இதனால் தாய்–மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். வழக்கம் போல் நேற்று இரவும் தாய்–மகள் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
வாக்குவாதம் முற்றவே இருவரும் தடித்த வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இதில் மனவேதனையடைந்த இந்திராணி மகள் கண் எதிரிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது சுவாதிகாரேவதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனவேதனையில் துடித்த அவர் சில நிமிடங்களிலேயே தூக்குப் போட்டு தன் உயிரையும் மாய்த்துக்கொண்டார்.
இன்று காலை வெகுநேரமாகியும் இந்திராணியின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இந்த நிலையில் சுவாதிகாரேவதியின் உறவினர் கோபால் இந்திராணி வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கதவை தட்டினார். பதில் ஏதும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியை நாடினார். அவர்கள் வீட்டுக்கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்த போது தாயும்–மகளும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து சரவணம் பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவையில் என்ஜினீயரிங் மாணவி, தாயுடன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating