மகன் மீது பாலியல் புகார்: தாய்–2 சகோதரிகள் தற்கொலை முயற்சி!!
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன் விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு பொன்னி என்ற மனைவியும், வசந்தகுமார் என்ற மகனும், 2 மகளும் உள்ளனர்.
வசந்த்குமார் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 12–ந் தேதி கல்லூரி விடுமுறைக்கு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகள் திவித்ரா மாற்றுத்தறனாளி. இவர் நேற்று வீட்டில் இருந்து ரோட்டிற்கு வந்தபோது கீழே விழுந்து விட்டார். அப்போது அங்கு வந்த வசந்த்குமார் திவித்ராவை தூக்கி விட்டுள்ளார்.
இதனை கண்ட மூக்கன் தனது மகளை வசந்த்குமார் கற்பழிக்க முயன்றதாக கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வசந்த்குமார் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது அவருடைய வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை செய்தனர்.
கல்லூரி முதலாமாண்டு படித்து வந்த வசந்த்குமார் மீது கற்பழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த அவரது தாய் பொன்னி (46), அவரது அக்காவும், கல்லூரி மாணவியுமான ரம்யா (23), தங்கை ரீனா(16) ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி கிடந்தனர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே மூக்கன் குடும்பத்தினருக்கும், ரெங்கநாதன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மகன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்து தாய் உள்பட சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating