தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 42–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் பேட்டி!!
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 42–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள் நடந்துள்ளன. இதனை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் கூறினார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சாமுவேல் ராஜ் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 42–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 10–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள் நடந்து உள்ளது.
பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த இருவேறு பிரிவினர் திருமணம் செய்து கொண்டதில் இதுவரை நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மட்டும்தான் கவுரவ கொலை நடந்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் அல்லாதவர்கள் இடையே திருமணம் நடந்ததை தொடர்ந்துதான் அதிக கவுரவ கொலைகள் நடந்துள்ளன.
கவுரவ கொலையை தடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என்ற கருத்து சொல்லப்படுகிறது. இதை ஏற்பதற்கு இல்லை. தற்போதுள்ள சட்டங்களின் படி கவுரவ கொலை வழக்குகளில் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்ய முடியாது. எனவே கவுரவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தை இயற்றினால் மட்டும் போதாது. இதை முறையாக அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு தாழ்த்தப்பட்ட மாணவர்களின் நலன் கருதி சுயநிதி கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் பல கல்லூரிகளில் இந்த உத்தரவுக்கு முரணாக ஆதிதிராவிட மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனவே ஆதிதிராவிட நலத்துறையும், கல்வித் துறையும் இணைந்து கல்வி கட்டணம் தொடர்பான அரசு உத்தரவை அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் இன்று தொடங்கி 3 நாட்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான், ஆதிதமிழர் விடுதலை இயக்க தலைவர் ஜக்கையன், தியாகி இம்மானுவேல் பேரவையை சேர்ந்த சந்திரபோஸ், தமிழ்புலிகள் இயக்க நாகை திருவள்ளுவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating