மூன்றரை கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளயடித்த கும்பலை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நகரில் முத்தூட் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்துக்குள் நேற்று மாலை நுழைந்த சிலர் துப்பாக்கி முனையில் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி, நாற்காலிகளோடு சேர்த்து கட்டிப் போட்டனர். கருவூலத்தில் இருந்த 11.26 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் 2.51 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி, தலைமறைவானது.
இந்த துணிகர கொள்ளை பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், முன்னாள் ஊழியர்களின் புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இந்த கொள்ளையின் பின்னணியில் சில ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என சந்தேகித்தனர்.
இரவோடு இரவாக அவர்களை சுற்றிவளைத்த போலீசார், முன்னாள் ஊழியரான கவுரவ் சிங்லா மற்றும் 2 பெண் ஊழியர்கள் உள்பட 6 பேரை கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்து 11.26 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் 2.51 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை முழுமையாக பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் முக்கிய புள்ளியாகவும், மூளையாகவும் இருந்த கவுரவ் என்பவனுக்கு ஏகப்பட்ட கடன் பிரச்சனை இருந்ததாகவும், அவற்றை தீர்த்துக் கொள்ள இந்த கொள்ளைக்கு திட்டமிட்டு, 2 பெண் ஊழியர்களின் துணையுடன் அதை நிறைவேற்றியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating