டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் காவல் நிலைய வாசலில் நீண்ட நேரம் உயிருக்கு போராடி விபத்தில் பலி!!
டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததால் தன் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளித்திரிந்த இளம்பெண் வேலைக்கு சேர்ந்த 4-ம் நாளே விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் அவரது குடும்பத்தாரை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையின் அந்தேரியில் உள்ள வெர்மா நகரைச் சேர்ந்தவர் அர்ச்சனா கிரித் பாண்டியா(22). இவர் கடந்த புதன் இரவு வேலை முடிந்து வீடு திரும்புகையில் குர்கானில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயற்சித்தார். ஒரு பகுதி சாலையைக் கடந்த அவர் எதிர்ப்புற சாலையைக் கடக்கும் போது சாலையில் அதிவிரைவாக வந்த வாகனம் அவர் மீது மோதியது.
வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட அவர் எதிர்ப்புறம் உள்ள வன்ராய் காவல் நிலையத்திற்கு வெளியே சுயநினைவற்ற நிலையில் பயங்கர காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 20 நிமிடங்கள் கழித்து அந்த வழியே சென்ற ஒருவர் காவல் நிலையத்திற்குள் சென்று போலீசாரிடம் வெளியே ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
உடனடியாக, அந்தப் பெண்ணை அருகிலுள்ள பாலா சாகேப் தாக்கரே மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அடிபட்ட வாகனம் குறித்து போலீசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காவல் நிலைய வாசலில் உள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யும் நிலையில் உள்ளதா என்பது கூட போலீசாருக்கு தெரியவில்லை.
விபத்துக்கு காரணமான அந்த அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating