வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவரை வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றனர்
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவரை இனந்தெரியாத ஆயுததாரிகள் வெளியில் இழுத்துக் கொண்டு வந்து சுட்டுவிட்டுச் சென்றுள்ளதாக கொலையுண்டவரின் மனைவி சோமசுந்தரம் மகேஸ்வரி (வயது 45) ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேற்படி சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. ஆலையடி வீதி வந்தாறுமூலை எனும் முகவரியில் வசித்து வந்த கண்ணாயுதம் பீதாம்பரம் (வயது 55) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையாரே கொலை செய்யப்பட்டவராவார். இவரது பிரேத பரிசோதனையை செங்கலடி வைத்திய அதிகாரி கே.சுகுமார் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தார். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட கொலை மரணம் என தீர்ப்பளித்ததுடன் மேலதிக விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்யுமாறும் ஏறாவூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.